

தாமிரவருணி நதிநீர்ப் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பாடல் தயார் செய்து விரைவில் வழங்கப்படும் என, திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறினார்.
பாரதி சேவா கேந்திரம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை நடைபெற்ற தாமிரவருணி நதிநீர்ப் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
தமிழகத்தின் வற்றாத ஜீவநதி தாமிரவருணி. இதன் கிளை நதியான ராமநதி பாய்ந்துவரும் கரையில் உள்ள ரவணசமுத்திரம் எனது சொந்த ஊர். என் நண்பர்கள் மூலம் நதிநீர்ப் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அறிந்துகொண்டேன். நதிகளைப் பாதுகாக்க எந்த உதவியையும் செய்யத் தயாராக உள்ளேன்.
தாமிரவருணி நதிநீர்ப் பாதுகாப்பை வலியுறுத்தி பாடல் எழுதித்தர இம்மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் வெள்ளைத்துரையிடம் கூறியுள்ளேன். அந்த விழிப்புணர்வுப் பாடலுக்கு விரைவில் நானே இசையமைத்து வழங்குவேன். தென்மாவட்ட நதிகள் மீது அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். அரசும், மக்களும் இணைந்து பாடுபட்டால் மட்டுமே நதிகளைப் பேணிக்காக்க முடியும் என்றார் அவர்.
கருத்தரங்குக்கு ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தார். மத்திய அரசின் நீர் நிர்வாகம் மற்றும் நதிகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் ஸ்ரீராம் வேதிரே, அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டலம் முதல்வர் ஜி. சக்திநாதன், ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு - கேரள அமைப்பாளர் கோ. ஸ்தாணுமாலயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பி. வெங்கட்ராமன் வரவேற்றார். பாரதி சேவா கேந்திர அறங்காவலர் ஏ. காமராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.