/

ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு! 

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் எதுவும்  இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:06 pm

DIN

சென்னை: மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் எதுவும்  இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

கடற்கரையோர கட்டுமானங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு உள்ளே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்றும், ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சமாதிகளையும் அகற்ற வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு  தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் கடற்கரையோர கட்டுமானங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் எந்த கட்டுமானங்ககளையும் எழுப்பக் கூடாது என்பதால், ஜெயலலிதாவுக்கு அங்கு நினைவிடம் அமைக்கக் கூடாது என்றும், ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சமாதிகளையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கில் தமிழக அரசு திங்களன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கடற்கரையோர கட்டுமானங்கள் ஒழுங்குமுறை சட்டமானது கடந்த 1991-ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது என்றும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சமாதிகள் அதற்கு முன்னரே அனுமதி பெற்று கட்டப்பட்டிருப்பதால், அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு உள்ளேதான் நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது கடற்கரையினை நோக்கியதாக அமையவில்லை, சாலையை நோக்கியதாகத்தான் அமையவுள்ளது என்பதால் கடற்கரைக்கு எந்த விதமான ஆபத்தினையும் ஏற்படுத்தாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது தலைமை நீதிபதிக்கு முன்னதாக திங்கள் மதியம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.