]
சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னை சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவரை, அங்கிருக்கும் லிப்ட் ஆபரேட்டர், ப்ளம்பர் உள்ளிட்ட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக 17 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னை சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் புதன்கிழமை அன்று முறையிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானரஜி கூறுகையில்,
"இந்த விவகாரத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படும். நாடு முழுவதும் வன்கொடுமை வழக்கில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்" என்றார்.
அதன்படி தற்பொழுது உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, மாநில குழநதைகள் ஆணையத்தின் உதவியுடன் இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். காவல்துறை பாதுகாப்புடன் சிறுமிக்கு உரிய சிகிச்சை பாதுகாப்பான இடத்தில் அளிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.