மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அம்மன் தேருக்கு இரண்டு புதிய சக்கரங்கள் சுமார் ரூ.3 லட்சம் செலவில் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேர்கள் இரண்டும் மிகவும் பாரம்பரியமிக்கவை. சிற்பங்கள் நிறைந்து காணப்படும் மீனாட்சி அம்மன் தேரானது சுமார் 9 அடி உயரமுடையது. இத்தேருக்கு ஆரம்பத்தில் மரத்தினாலான சக்கரங்களே இருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி பெல் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட தலா நான்கு டன் எடையில் 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டன.
சுவாமி தேரானது சுமார் 12 அடி உயரமுடையது. அத்தேருக்கு முன்பகுதி, நடுப்பகுதி, பின்பகுதி என 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாசி வீதிகளில் மேடு, பள்ளங்களில் தேர் இறங்கி, ஏறி வரும் போது அதன் நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
சுவாமி தேரைப்போல அம்மன் தேருக்கும் ஆறு சக்கரங்கள் இருக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, திருச்சி பெல் நிறுவனத்தில் இரு புதிய சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டன. கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டன.
அம்மன் தேருக்கான புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது. அம்மன் தேரின் மையத்தில் சக்கரம் பொருத்துவதற்கு ஏற்ப பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் இரும்பாலான சுமார் 2 டன் எடையுள்ள இரு சக்கரங்களும், அதற்கான ஒரு டன் எடையுடைய அச்சும் பொருத்தப்பட்டன. இப்பணியானது மாலை 6 மணி வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.
தற்போது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சுவாமி, அம்மன் ஆகிய இரு தேர்களுக்கும் ஆறு சக்கரங்கள் கொண்டதாக உள்ளன. இதன்மூலம் தேரோட்டத்தின்போது, தேரை விரைந்து இழுத்து நிலைக்குக் கொண்டு வர ஏதுவாக இருக்கும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.