சென்னை: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளியன்று மாலை மதுரை வந்திருந்தார். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கடவுளின் கருணையால் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இரு மாநிலங்களும் இடையே நீரை பங்கிடுவதில் பிரச்சனை இருக்காது. அதனால் கடவுளின் அருளால் இம்முறை தமிழகத்திற்கு நீர் திறப்பதில் பிரச்னை இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
கர்நாடக முதல்வரிடம் பேசினேன். கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். தற்பொழுது காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கிய பிறகு, இரு மாநில நல்லுறவால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.