சேலத்தில் மாணவி வளர்மதி கைது

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு நிலத்தின் அளவை கணக்கெடுக்க வந்த வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மாணவி வளர்மதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம் முதல் சென்னை வரை 277 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு சேலம் மாவட்டத்தில் மட்டும் 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு 26 கிராமங்களில் சுமார் 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்துக்கு தொடக்கம் முதலே பசுமை சாலைக்காக மரங்களை அழிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று விமரிசனம் எழுந்தது. 

அதுமட்டுமின்றி இந்த சாலைக்காக விவசாய நிலங்களையும் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சாலை அமையவுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூலை 10-ஆம் தேதி கருத்துக் கேட்பு நடைபெற உள்ளது. 

ஆனால், வருவாய் அதிகாரிகள் அதற்கு முன்னதாகவே நேற்று (திங்கள்கிழமை) அடிமைலைபுதூர் பகுதியில் தோட்டத்தில் நில அளவு பணியை மேற்கொண்டனர். அதற்கு அந்த கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில், சமூக ஆர்வலரும் மாணவியுமான வளர்மதி இன்று 8 வழி சாலை தொடங்கும் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவு பணியை மேற்கொள்ள வந்த வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்த முயன்றார். இதையடுத்து, அவர் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக, இந்த திட்டத்துக்கு எதிராக கிராம மக்களை தூண்டிவிட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலி கான் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com