

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான காவல்துறையின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டக்காரர்களுக்கும், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து, போராட்டம் வன்முறையில் முடிந்தது.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 9 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த பேரில் 3 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 5 பேரில் ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது.
ரயில்வே காலணி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பெண்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தடியடி தடத்தியும் அவர்கள் கலைய மறுத்துவிட்டனர்.
இந்த வன்முறையில் இரண்டு போலிஸ் ஜீப்களுக்கு தீ வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
காவல்துறையின் தடியடியால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கும் தீ வைத்தனர்.
தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் வைக்க மதுரை மற்றும் மணிமுத்தாறு பகுதிகளில் இருந்து கூடுதல் காவல்துறை படைகள் வரவழைக்கப்பட்டன.
சுமார் 12.50 மணியளவில், போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்பகுதியே வன்முறைக் களமானது.
சமூக வலைத்தளங்கள் மூலமாக, போராட்டம் குறித்து தகவல் பரவி, ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் திரண்டதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தடையை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
காவல்துறை எதிர்பாராத வகையில், மடத்தூர், பனிமயமாதா தேவாலயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒன்றுதிரண்ட பக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாலா திசைகளில் இருந்தும் திரண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.