குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார்
தடைவிதித்தனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை குற்றாலம் பேரருவியின் ஓரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். திங்கள்கிழமை காலை தண்ணீரின் சீற்றம் குறைந்ததை அடுத்து, பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், பிற்பகல் முதல் பெய்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. 2 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்தருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.