தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் & புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்டங்கள் & புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சங்கராபுரம், கும்பகோணத்தில் தலா 10 செ.மீட்டரும், மயிலாடுதுறையில் 8 செ.மீட்டரும் மழைப்பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் ஒருசில இடங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.