சென்னையில் திமுக தலைமையில் வரும் 23ம் தேதி நடைபெறும் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் எழுந்து வரும் கடும் எதிர்ப்பை ஒருமுகப்படுத்துகிற வகையில் வருகிற 23.12.2019 அன்று சென்னையில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்ப்பையும் பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் இந்தப் பேரணியில் பெருமளவில் அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டு பங்கேற்க இருக்கிறார்கள். இதற்கு காரணம் இச்சட்டத் திருத்தம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது தான்.
மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிற பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறவுள்ள இக்கண்டனப் பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் மூவர்ணக் கொடியுடன் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட்டதை பறிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிற பா.ஜ.க. அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்டுகிற வகையில் கண்டனப் பேரணி அமைய வேண்டும்.
இப்பேரணியின் மூலம் சென்னை நகரமே திணறியது என்கிற வகையில் பெருமளவில் அணி அணியாய், அலை அலையாய் திரண்டு வர வேண்டுமென அனைத்து தரப்பு மக்களையும் அன்போடு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.