வெங்காய விலையேற்றத்தால் வெங்காய தோசை(ரோஸ்ட்) விலை உயர்ந்துள்ளது என்பதை நகைச்சுவையாக பதாகையை ஒட்டி வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தியள்ளது ஈரோட்டில் உள்ள ஹோட்டல் நிர்வாகம்.
கடந்த சில மாதங்களாக வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இப்போது வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் ஹெட்டல் உரிமையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது. இதனால் அவர்கள் ஹோட்டல்களில் வெங்காய தோசை, வெங்காய ஊத்தப்பம், பஜ்ஜி ஆகியவற்றுக்கு விடை கொடுத்து விட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகில் 24 மணி நேரமும் இயங்கும் ஹோட்டல் நிர்வாகம் ரூ.50-க்கு விற்ற வெங்காய தோசையை ரூ.100 ஆகவும், ரூ.60-க்கு விற்ற வெங்காய ஊத்தாப்பத்தை ரூ.120 ஆகவும் உயர்ந்தியுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து நூதன முறையில் பதாகையை ஒட்டி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரைக்கலைஞர்கள் ஓமக்குச்சி நரசிம்மன் மேலாளர் போன்றும், கவுண்டமணி வாடிக்கையாளர் போன்றும் பேசிக்கொள்ளும் பதாகையில் விலையை குறுப்பிட்டு, வெங்காய தோசையை பார்சல் வாங்கிச்சென்றால் வீடு வரை பாதுகாப்பு தர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகை வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதோடு அல்லாமல், இதனைப் பார்த்துவிட்டு சிரித்து விட்டு செல்கின்றனர்.
வெங்காய தோசை விலையேற்றத்துக்கான காரணத்தை நகைச்சுவையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதாகையை ஒட்டியதாக தெரிவித்த ஹோட்டல் நிர்வாகம், வெங்காயம் விலை உயர்வுக்குப் பிறகு, வெங்காய தோசை ஆர்டர் 10 சதவீதமாக குறைந்துவிட்டது என்றது.