திருப்பூர் அருகே வாக்களித்து விட்டு வெளியே வந்த முதியவர் மரணம்
திருப்பூரை அடுத்த குண்டடம் பகுதி உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்களித்துவிட்டு வெளியே வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், பொங்கலூர், உடுமலை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாவது கட்டத் தேர்தல் இன்று(திங்கள்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குண்டடம் அடுத்துள்ள மருதூர் வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அப்போது மருதூரை அடுத்துள்ள நொச்சிப்பாளயத்தைச் சேர்ந்த விவசாயி தண்டபாணி(80) இன்று காலை 10.30 மணியளவில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி முன்பாகவே தண்டபாணி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்படி அங்கு வந்த அவரது உறவினர்கள் தண்டபாணியின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மருதூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.