/

புதுவை சட்டப்பேரவை மார்ச் 2-இல் கூடுகிறது: இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் திட்டம்

இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில், புதுவை சட்டப்பேரவை மார்ச் 2-ஆம் தேதி கூடுகிறது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:43 am IST


இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில், புதுவை சட்டப்பேரவை மார்ச் 2-ஆம் தேதி கூடுகிறது.
ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது. அரசு ஊழியர்களுக்கான ஊதியம்,  திட்டங்களுக்கான செலவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள, ஆளும் அரசு மார்ச் மாத இறுதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். அப்போது, ஒதுக்கீடு அனுமதி பெறப்படும் தொகையானது அந்த நிதியாண்டின் இறுதிக்காலமான மார்ச் மாதம் வரை செலவு செய்யப்படும்.
 மீண்டும் ஏப்ரலில் இருந்து செலவு செய்வதற்கு சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி பெற வேண்டும்.
அதன் காரணமாகத்தான், தற்போது பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், புதுவையில் கடந்த 8 ஆண்டுகளாக முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது இல்லை.
அதற்கு ஆண்டுக்கு ஆண்டு ஏதேனும் ஒரு  காரணம் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு துணைநிலை ஆளுநர் ஒரு காரணமாக இருந்து வருகிறார். அதாவது, கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரே இதுவரை முடித்து வைக்கப்படாமல் இருந்து வருகிறது. முடித்து வைத்தால், மீண்டும் சட்டப்பேரவையைக் கூட்ட  துணைநிலை ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி கேட்கும்போது அவர் கடந்த ஆண்டு எப்படி நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாரோ, அதுபோல, இந்த ஆண்டு தனது உரையும் இடம்பெற வேண்டும் அல்லது வேறு ஏதேனும் ஒரு கோரிக்கையை  வலியுறுத்துவார். இது ஆளும் காங்கிரஸ் அரசு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
இதனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தால்தானே ஆளுநரின் அனுமதி பெற வேண்டும், அதுவே இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக இருந்தால், ஆளுநரின் அனுமதி தேவையில்லையே என்ற நோக்கில் கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டப்பேரவையை மார்ச் 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்ட இருப்பதாக பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மூன்று அல்லது நான்கு மாத அரசின் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு மட்டும் அனுமதி பெறப்படும் எனத் தெரிகிறது.
வழக்கமான ஆளுநர் உரையைப் புறக்கணித்துவிட்டு, பேரவையைக் கூட்டும் நடவடிக்கை புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.