பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது, போலீஸார் செல்லிடப்பேசியை பயன்படுத்தினால் துறைரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பு, கோயில் திருவிழா பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பணிகளில் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேபோல அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர், மத மற்றும் சமூக இயக்கங்கள் போராட்டங்கள் போன்றவற்றுக்கும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக 35 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
திசை திரும்பும் கவனம்: காவல்துறையின் அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களின்போதும், முக்கியமான போராட்டங்களின்போதும், இக்கட்டான சூழ்நிலையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் செல்லிடப்பேசியில் கவனம் செலுத்துவதால், சில வேளைகளில் மோசமான நிலையை சந்திக்க வேண்டியுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் கருதிவந்தனர்.
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் போலீஸார், பணியில் கவனம் செலுத்தாமல் கவனக்குறைவாக இருப்பதினால் பிரச்னை ஏற்படுவதாகவும், மேலும் அங்கு நடைபெறும் சம்பவங்களை செல்லிடப்பேசி கேமரா மூலம் பதிவு செய்து கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை போன்றவற்றில் பதிவிடுவதாலும் பிரச்னை ஏற்படுவதாகவும், காவல்துறை பற்றிய ரகசியத் தகவல்கள் வெளியே கசிவதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் செல்லிடப்பேசி பயன்படுத்துவதற்குத் தடை விதித்து கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், போக்குவரத்தை சீரமைக்கும் பணி, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புப் பணி, அரசியல் கட்சித் தலைவர்கள் பாதுகாப்புப் பணி,கோயில் திருவிழா பாதுகாப்புப் பணி உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் செல்லிடப்பேசியை பயன்படுத்தக் கூடாது, உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் பணியின் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
உயர்நீதிமன்றம் வருத்தம்: இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாமல் செல்லிடப்பேசியை பயன்படுத்தும் போலீஸாரின் செயல் வேதனை அளிப்பதாக செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து, டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி, பாதுகாப்பு பணி ஆகியவை மிக முக்கியமானது. போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது, காவலர்கள் முழுமையாக அதில் கவனத்தை செலுத்த வேண்டும், அப்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தினால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கண்டறிய முடியாது. எனவே இப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் கண்டிப்பாக செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது.
மீறி செல்லிடப்பேசியை பயன்படுத்தும் காவலர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










