கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாதி ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான போக்கினை மேற்கொள்கிறதா அரசு?: மார்க்சிஸ்ட் கேள்வி 

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு ஆதரவான போக்கினை  தமிழக அரசு மேற்கொள்கிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2019, 11:48 am

DIN

சென்னை: சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு ஆதரவான போக்கினை  தமிழக அரசு மேற்கொள்கிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைகள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்து வந்துள்ள சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஒருவரை ஒருவர் விரும்பி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், விஷ்ணுபிரியா தம்பதியினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலையில் சிந்தப்பட்ட ரத்தம் காய்வதற்கு முன்னரே நேற்று இரவு (3-7-2019) தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் கிராமம், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த,    4 மாதங்களுக்கு முன்னால் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சோலை ராஜா, ஜோதி தம்பதியினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள இரண்டு உள்சாதி பிரிவுகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிய ஆணவ மனோபாவம் அனைத்து சாதிகளை  சார்ந்தவர்களிலும் மனிதாபிமானமற்றவர்களை உருவாக்குகிறது என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்ச்சமூகத்தில் நிலவும் இத்தகைய சாதி ஆணவ மனோபாவம் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாகும். இத்தகைய சாதி ஆணவ மனோபாவத்தை வேரோடு அழித்திட அனைத்து ஜனநாயக நல்லெண்ணம் கொண்டவர்களும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலை நடந்த போதும், இப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தனி சட்டம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தப்பட்ட பின்னரும் தமிழக அரசு அமைதி காத்து வருவது வன்மையான கண்டத்திற்குரியதாகும். மேலும், சாதிய ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதது ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான போக்கினை அரசு மேற்கொள்கிறதோ என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

எனவே, உடனடியாக ஆணவக்கொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும், ¨            சாதி ஆணவ சிந்தனைப்போக்கை வேரறுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசே மேற்கொண்டு நடத்த வேண்டும், சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்களை அரசே நேரடியாக தத்தெடுத்துக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது, அரசு வேலை வழங்குவது, தொழில் துவங்க கடன் வழங்குவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.