என்னடா இப்படி வெயில் கொளுத்தி வருகிறது, ஆனால் வட தமிழகத்துக்கு இன்று அதிர்ஷ்டமான தினம் என்கிறார்களே என்று பார்க்க வேண்டாம். நாங்கள் சொல்லவில்லை தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், எந்த சந்தேகமும் இல்லாமல், இன்று வட தமிழக மாவட்டங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள்தான்.
தெற்கு சென்னைப் பகுதிகளும் கூட இன்று மழையைப் பெறும். அடுத்த 3 நாட்கள் மிகவும் சிறப்பான நாட்களாகக் காட்சியளிக்கின்றன. அந்த 3 நாட்களையும் பார்க்கும் போது இன்று அவ்வளவு இனிமையான நாளாக தெரியவில்லை.
தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை மழை பெய்யும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். தலைக்கு மேல் இருக்கும் மேகக் கூட்டங்களும், கடுமையான வெப்பமுமே இதற்குக் காரணம். இன்று மாலை நேரத்தில் லேசான தூறலுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அது தவறிவிட்டால் இன்று இரவு தூறலுக்கான வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு வெப்பச் சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது கடுமையான வெயிலை உணர முடிகிறது. இதுவும், வானத்தில் திரியும் மேகங்களும் உள் மாவட்டங்களில் ஒன்றாக சேர்ந்து நள்ளிரவில் மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
இம்மூன்று மாவட்டங்களிலும் இன்று இரவு முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு செம பிரகாசமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.