சென்னை: ‘வரைவு தேசிய கல்விக் கொள்கை’ குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினர் தங்களது அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி வல்லுனர்கள் கருத்தினை அறிய திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
எனவே, இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட தி.மு.க. சார்பில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி - முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு - தமிழக அரசு உயர்கல்வி மன்ற முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ.இராமசாமி - தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ம.இராஜேந்திரன் - பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி - கழக மாணவர் அணிச் செயலாளர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ.,. - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தை டாக்டர் ரவீந்திரநாத் - பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு - தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி., - சமூக செயற்பாட்டாளர் முனைவர் திருமதி சுந்தரவள்ளி ஆகியோரைக் கொண்ட ஒரு “ஆய்வுக் குழு”வினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 14-7-2019 அன்று அமைத்தார்.
இந்த “ஆய்வுக் குழு” பத்து நாட்களுக்குள் மேலாக ஆய்ந்து, கலந்தாலோசித்து உருவாக்கிய தனது அறிக்கையினை; கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், இன்று (26-7-2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் அளித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.