சென்னை: ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் நடைபெறும் ஆணவக்கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, உயர் நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையின் போது, ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வழக்கானது திங்கக்கிழமையன்று நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக இதுவரை தமிழ்நாட்டிலுள்ள காவல்நிலையங்களில் சிறப்புப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இருக்கும் குறைந்த ஆள்பலத்தைக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் எப்படி சிறப்புப்பிரிவு ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் ஆணவக்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக, தமிழக அரசு ஒரு துணடறிக்கை கூட வெளியிடவில்லை என்று அதிருப்தி தெரிவித்ததுடன், தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்றும் கருத்து தெரிவித்தது.