சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கை விசாரிப்பதற்கான புதிய விசாரணை அமர்வு பற்றிய அறிவிப்பை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கு, செவ்வாயன்று நீதிபதிகள் சசிதரன், மற்றும் ஆஷா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்த போது, சில உத்தரவுகளை தான் பிறப்பித்துள்ளதை நீதிபதி சசிதரன் சுட்டிக்காட்டினார். எனவே தொடர்ந்து இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மேலும் வேறு விசாரணை அமர்வு ஒன்றை ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் தரப்பில் தரப்பில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கை விசாரிப்பதற்கான புதிய விசாரணை அமர்வு பற்றிய அறிவிப்பை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டார்.
அதன்படி இந்த வழக்கினை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.