சென்னை: வியாழன்று மறைந்த அதிமுக எம்.எல்.ஏ கனகராஜின் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தவர் கனகராஜ். வியாழனன்று காலை வீட்டில் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணமடைந்தார். இவருக்கு வயது(67).
கனகராஜுக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
2016 சட்டப்பேரவையில் கனகராஜ் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
கனகராஜ் மறைவால் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் காலியிடம் 22ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளுடன் சூலூர் தொகுதியும் காலியாகிறது.
இந்நிலையில் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வெள்ளி மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.