2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 2010, 2011, 2018 ஆண்டுகளில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் களமிறங்கியது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்ததில் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிபெற்று 4-ஆவது முறையாக கோப்பை வென்று சாதனைப் படைத்தது.
இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.12.5 கோடி பரிசளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஹைதராபாத், தில்லி அணிக்கு தலா ரூ.8.75 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.