நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி கேஎஸ் அழகிரி பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் எம்.பி.யாகி விட்டதால் அந்த தொகுதி காலியானது. விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலி இடமானது.
எனவே, காலியாக உள்ள இந்த 2 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட திட்டமிட்டு வருகிறது. ஆனால் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த தொகுதியை தி.மு.க.விடம் இருந்து பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி கேஎஸ் அழகிரி பங்கேற்ற கூடடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.