சென்னை: 2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை கண்டிப்பாக நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவாவில் புதன்கிழமைன்று துவங்கிய இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வியாழனன்று மாலை அவர் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது.
எனக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு தமிழ் மக்களே காரணம். அவர்களுக்கே இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.
தமிழகத்தின் நலனுக்காக நடிகர் கமலுடன் இணைந்து செயல்படுவதாக இருந்தால் யாருக்கு முதல்வர் பதவி என்று கேள்விக்கு, 'அதெலாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அப்போதுள்ள சூழலின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. நான் கட்சி துவங்கி, நிர்வாகிகளை நியமிக்கும் வரை இதுகுறித்து எப்போதும் கருத்துக் கூற விரும்பவில்லை.
2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் நான் கூறிய அதிசயத்தை, அற்புதத்தை 100 நூற்றுக்கு நூறு சதவீதம் கண்டிப்பாக நிகழ்த்துவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.