ராமநாதபும் மாவட்டத்தில் கடலோரக் கிராமங்களில் இரண்டாவது கட்டமாக ராமகிருஷ்ண மடம் சார்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வேலையின்றி தவிக்கும் நாகாச்சி பகுதி ஏழை எளிய மக்களுக்கு தலா ரூ.850 மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பையை ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகாச்சியில் 500 பேருக்கு கோட்டாட்சியர் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக நாகாச்சி ஊராட்சிப் பகுதியான கடற்கரை தோப்புவலசை, ஆர்.எம்.எஸ்.நகர், அண்ணாநகர், பனங்காக் கூட்டம், பெரியதர்வலசை, ஆக்கிடாவலசை, நடுவலசை, ஆக்கிடாதோப்பு வலசை, கல்கிணற்றுவலசை, நம்பாயி வலசை, அஞ்சு ஏக்கர் தோப்பு வலசை உள்ளிட்ட இடங்களில் 700 பேருக்கு வழங்கப்பட்டன.
கடற்கரை தோப்பு வலசையில் நடந்த அத்தியாவசியப் பொருள் வழங்கல் நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமை வகித்தார். இதில் சுவாமி திரிலோகநாதா, ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் முருகேஸ்வரி, சரவணன், அரசியல் பிரமுகர்கள் கணேசன், லாரி உரிமையாளர்கள் சங்க பிரமுகர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.