மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு: கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் எஞ்சிய 4 பேரும் இன்று மாலை வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கரோனா தொற்றி இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 8:58 am

DIN

ஈரோடு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் எஞ்சிய 4 பேரும் இன்று மாலை வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கரோனா தொற்றி இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது. மேலும் தொடர்ந்து 13 நாட்களாக தொற்று உறுதி செய்யப்படாததால், மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிதகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடக்க நிலையில் இந்தியாவே உற்று நோக்கிய மாவட்டம் ஈரோடு. தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 6 பேரில் 2 பேருக்கு கரோனா கண்டுபிடிக்கப்பட்டதும் ஈரோடு மாவட்டம் பரபரப்பாக மாறியது. சென்னை, காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக ஈரோடு என்ற பட்டியல் இருந்தாலும் தமிழகத்தில் அனைவரது பார்வையும் ஈரோட்டை நோக்கியே இருந்தது.

2 பேருடன் எண்ணிக்கை முடிந்து விடாமல் தினசரி ஈரோட்டை சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருந்தது. 20 பேர் வரை வேகமாக வந்த எண்ணிக்கை ஓரிரு நாட்கள் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இல்லை என்று இருந்தது. 

ஆனால் அடுத்தடுத்த 70 பேர் வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தாய்லாந்து நபர்கள் 3 பேர், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள், புதுதில்லி சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று இந்த பட்டியல் இருந்தது.

 இதனிடையே கரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கரோனா தடுப்பு இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றனர். சுகாதாரப் பணிகள், தூய்மைப்பணிகள், தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

தாய்லாந்து நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட உடனேயே அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் தேடிப்பிடித்து அவர்களையும் தனிமைப்படுத்தியதுடன், அவர்கள் வசித்து வந்த பகுதியையும் தனிமைப்படுத்தினர்.

 தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்தி அறிவித்த பிறகு, மாவட்டத்துக்குள் சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதிவாரியம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இதுபொதுமக்களுக்கு சற்று வியப்பை அளித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இந்த நடவடிக்கையில் மிகத்தீவிரமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் புதுதில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலம் கரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வந்த உடனேயே ஈரோடு மாவட்டத்தில் இருந்து புதுதில்லிக்கு சென்று வந்த அனைவரையும் வீடு வீடாகச் சென்று போலீஸார் அழைத்து வந்து, அவர்கள் ஒத்துழைப்புடன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது சமூகப் பரவலை கட்டுப்படுத்த மிகப்பெரிய உதவியாக இருந்தது.

அதற்கு பின்னர் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்பதால், அவர்கள் சார்ந்த பகுதியையும் தனிமைப்படுத்துவது எளிதானது. ஈரோடு மாவட்டத்தில் 18 இடங்களில் 32,435 குடும்பங்களை சேர்ந்த 1.20 லட்சம்  பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். சுமார் 1,000 பேர் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரோனா பரிசோதனை செய்த மொத்த நபர்கள் 1,258. இதில் 70 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் கோவையிலும், ஒருவர் திருச்சியிலும் சிகிச்சை பெற்றவர்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேரடியாக கண்டறியப்பட்டவர்கள் 65 பேராக இருந்தது.

 பொதுஇடங்களில் மக்கள் கூடாமல் இருக்க சந்தைகள் மாற்றம் செய்தது. சாலைகள் அடைக்கப்பட்டது. வீதிகளுக்கே காய்கறிகள் வர ஏற்பாடு செய்தது என்று பல வி‌ஷயங்கள் தினசரி நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டன. ஈரோடு மாநகரத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் கிருமி நாசினி தெளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து சிறப்பு பணிக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அரசு மருத்துவர்கள் தீவிர பணியாற்றினர். இதனால் ஈரோட்டில் குறிப்பிட்ட நாட்களில் கரோனாவில் இருந்து பலரும் குணம் அடைந்தனர். இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கடைசியாக கடந்த 15ஆம் தேதி 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு கடந்த 13 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதுவரை புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாததால் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 14 நாட்கள் வரை புதிதாக கரோனா தொற்று இல்லாவிட்டால் தற்போது சிவப்பு மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஊரடங்கில் தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து ஒரு சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.