சென்னை: உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடல் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணியளவில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, கண்ணீர் விட்டு அழுதார்.
முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்திருந்த இரங்கல் செய்தியில், அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். தொற்று காலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்காக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். கரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்பது குறித்து அச்சம் கொள்ளாமல் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச். வசந்தகுமாா் (70) வெள்ளிக்கிழமை காலமானாா்.
தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் வசந்தகுமார் உடலுக்கு, அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் ஏராளமான பொதுமக்களும், அப்பகுதி வணிகர்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நிமோனியா பாதிப்பு காரணமாக எச்.வசந்தகுமாரும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனா். இதில் தமிழ்ச்செல்வி உடல்நலம் தேறினாா்.
எச்.வசந்தகுமாா் கரோனா பாதிப்பிலிருந்து உடல்நலம் மீண்டு வந்த நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் காலமானாா். எச்.வசந்தகுமாருக்கு நடிகா் விஜய் வசந்த், வினோத்குமாா் ஆகிய இரு மகன்களும், தங்கமலா் என்ற மகளும் உள்ளனா்.