கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “புரெவி” புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 முதல் 5.12.2020 வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் பெருமக்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கன மழையின் காரணமாக
அதிக பாதிப்பு இருப்பதால், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் சி.வி சண்முகமும் மேற்கூறிய இரு அமைச்சர்களுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.