பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல இளையராஜாவிற்கு அனுமதி

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிற்க்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இளையராஜா
இளையராஜா
Updated on
1 min read

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிற்க்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கையும், காவல்நிலையத்தில் அளித்த புகாரையும் திரும்பப் பெற்றதால் இளையராஜாவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டுடியோவிற்குள் இளையராஜா இருக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காககைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கூட்டம் கூடும் என்பதால் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாகப் போகும் பட்சத்தில், இளையராஜாவையும் அவருடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.  பிரசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளின்படி, கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், இடத்துக்கு உரிமை கோர மாட்டேன் என இளையராஜாவின் தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.அப்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் பிரமாணப் பத்திரமாக இல்லாமல் மெமோவாக மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது இளையராஜா தரப்பில் ஆயிரம் படங்களுக்கும் மேலாக இசையமைத்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் தான் எப்போதும் வார்த்தை தவறியதில்லை. கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியது இல்லை என வாதிடப்பட்டது.

பின்னர் இளையராஜா தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  சென்று தியானம் செய்யவும், பொருள்களை எடுத்துவரவும் இளையராஜாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஒரு உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதித்துள்ளார்.

இந்த  நடைமுறைகளுக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆணையராக வி. லட்சுமிநாராயணன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். பொருட்களை எடுக்கும் தேதி குறித்து இரு தரப்பு வழக்குரைஞர்களும் பேசி முடிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். பொருட்களை எடுக்க இளையராஜா வரும் நாளன்று பிரசாத் ஸ்டுடியோவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com