போடி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு : கொட்டும் பனியில் திரண்ட பக்தர்கள்

போடியில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.
போடி ஸ்ரீநிவாச பெருமாள்
போடி ஸ்ரீநிவாச பெருமாள்


போடி: போடியில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

     போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட, பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை  அதிகாலை நடைபெற்றது.  இதற்காக கோவில் வளாகத்தில் பூக்கள் அலங்காரத்தால் சொர்க்கவாசல் அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதலே கோவிலில் உள்ள சொர்க்கவாசல் மண்டபத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

     அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின்போது திருப்பாவைக் குழுவினர் பக்திப் பாடல்களைப் பாடினர்.

     மேலும் மூலவருக்கும்  அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் செயல் அலுவலர் சுரேஷ், கோவில் அர்ச்சகர் சீனிவாச வரதன் என்ற கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

     இதேபோல் போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் சன்னதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் சங்கரநாராயண பெருமாளுக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பக்தர்கள் சங்கரநாராயணனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

     இதேபோல் போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராய பெருமாள் கோவில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயப் பெருமாள் கோவில், சிலமலை பெருமாள் கோவில், தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com