மாற்றுத் திறனாளிகள் 25% கூடுதல் பொங்கல் பரிசுத் தொகை கோர முடியாது: தமிழக அரசு தகவல்

பொங்கல் பரிசுத் தொகை குடும்பங்களுக்கு வழங்கப்படுவதால், மாற்றுத் திறனாளிகள் 25 சதவீதம் கூடுதல் தொகை கோர முடியாது என தமிழக அரசு,  உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் 25% கூடுதல் பொங்கல் பரிசுத் தொகை கோர முடியாது: தமிழக அரசு தகவல்
மாற்றுத் திறனாளிகள் 25% கூடுதல் பொங்கல் பரிசுத் தொகை கோர முடியாது: தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குடும்பங்களுக்கு வழங்கப்படுவதால், மாற்றுத் திறனாளிகள் 25 சதவீதம் கூடுதல் தொகை கோர முடியாது என தமிழக அரசு,  உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து விதமான மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதனடிப்படையில் கடந்த 21ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும். 

கடந்த 2016-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்படும் தொகைகளில், 25 சதவீதம் கூடுதலாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். 
கடந்த 2019-ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட போதும், 25 சதவீதம் கூடுதல் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பொங்கல் பரிசு என்பது திட்டமல்ல எனக் கூறி தங்கள் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது.

திட்டம் இல்லாமல் பரிசுத் தொகை வழங்க முடியாது என்பதால், பொங்கல் பரிசில் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீத கூடுதல் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,  அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், பொங்கல் பரிசு குடும்பத்துக்கு வழங்கப்படுகிறதே தவிர தனி நபர்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவு இந்த திட்டத்துக்கு பொருந்தாது என வாதிடப்பட்டது.மேலும், மாற்று திறனாளிகளுக்கு ரூ. 33 கோடி  உதவித்தொகையாக விநியோகிக்கப்படுகிறது. ரூ.455 கோடி மதிப்பில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு  விசாரணையை வரும் ஜனவரி 5 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com