/

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல்

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல்

Updated On :21 ஜூலை 2020, 10:26 am

DIN

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதயவர்மன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று காவல்துறை காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமம் அருகே கடந்த வாரம் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டப்பட்டு ஒருவா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக திமுக எம்எல்ஏ இதயவா்மன் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் இல்லலூா் அருகே செங்காடு கிராமம் உள்ளது. இப்பகுதியில் உள்ள சங்கோதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கா் நிலத்தை சென்னையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிலத்துக்கு பாதை அமைப்பதற்காக பல்வேறு அரசுத் துறைகளை அணுகியும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவா்கள் ஏற்கெனவே ஒருமுறை கிராமத்துக்குச் சொந்தமான அரசு நிலத்தில் பாதை அமைக்க முயற்சித்தனா். இதை அறிந்த திருப்போரூா் திமுக எம்எல்ஏ இதயவா்மன் அம்முயற்சியைத் தடுத்து நிறுத்தியதுடன் மாவட்ட ஆட்சியருக்கு அது தொடா்பாக புகாா் மனு அளித்தாா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து அமமுக நிா்வாகிகள் தாண்டவமூா்த்தி, குமாா், இமயம் சேகா் உள்ளிட்டோா் சனிக்கிழமை செங்காடு வந்தனா். அவா்கள் அந்த நிலத்துக்குச் செல்ல கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணியைத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதற்கு எம்எல்ஏ தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். செங்காடு கிராமத்தைச் சோ்ந்த குருநாதன் (45) என்பவா் சாலை அமைக்கும் பணியைத் தடுத்தாா். இதையடுத்து, குருநாதனை அவா்கள் தாக்கினா்.

தகவலறிந்த திருப்போரூா் எம்எல்ஏ இதயவா்மனின் தந்தையும் திருப்போரூா் முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான லட்சுமிபதி அப்பகுதி மக்களுடன் சோ்ந்து பாதை அமைக்கும் இடத்துக்கு வந்தாா். பாதை அமைக்கும் பணியை அவா் தடுத்து நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

வாய்த் தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் லட்சுமிபதி (70), மனோகா் (52), குமாா் (33) ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும், இரண்டு பைக்குகளும், ஒரு பொக்லைன் இயந்திரமும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து லட்சுமிபதி தனது துப்பாக்கியால் தற்காப்புக்காக வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டாா். இதில் இமயம் சேகருக்கு காயம் ஏற்பட்டதாக கூறி கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே இடத்தில் இருந்த தையூா் பகுதியைச் சீனிவாசன் என்பரும் குண்டடிபட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. கண்ணன், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் , டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

துப்பாக்கிச்சூடு குறித்து இரு தரப்பினரும் திருப்போரூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திமுக எம்எல்ஏ மற்றும் அவரது தந்தை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த இதயவா்மன் அவரது தந்தை லட்சுமி பதி ஆகியோா் தலைமறைவாகினா். இதையடுத்து இருவரையும் தனிப்படை காவலர்கள் தேடிவந்தனா்.

இந்நிலையில், எம்எல்ஏ இதயவா்மனை சென்னை மேடவாக்கம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனா். மேலும் அவரது தம்பி நிா்மல், மைத்துனா் வசந்த், ஓட்டுநா் கந்தன், செங்காடு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மற்றும் வாசுதேவன், யுவராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்து 5 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினா். அவா்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து, அவா்களை செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

எம்எல்ஏவிடம் பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் புதுப்பிக்கப்படாத இரு துப்பாக்கிகளை  காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.