/

தமிழகத்தில் 3 ஆயிரம் ஹெக்டர் மரவள்ளிக்கிழங்கு மாவுப் பூச்சியால் பாதிப்பு: ககன்தீப் சிங் பேடி தகவல்

தமிழகத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் 3000 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளிப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

News image
Updated On :2 ஜூன் 2020, 10:35 am

DIN

தமிழகத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் 3000 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளிப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தமிழகத்தில் சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த பயிர்களில் மாவுப் பூச்சித் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. இதனால் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், கோவை வேளாண் பல்கலைக்கழக வல்லுநர்கள், பூச்சியியல் வல்லுநர் கள் நேரடியாகப் பார்வையிட்டனர். 

விவசாயிகளிடம் மரவள்ளி பயிர்களைப் பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிலையில் தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமையன்று நாமக்கல் மாவட்டத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். நாமகிரிப்பேட்டையில் இயற்கை முறையில் மரவள்ளி பயிர் விவசாயம் செய்த சரவணன் என்ற விவசாயியின் தோட்டத்திற்குச் சென்று மாவுப்பூச்சி தாக்குதல் இல்லாமல் பயிரிடுவது குறித்துக் கேட்டறிந்தார். 

இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் வட்டாரத்தில் ஈச்சம்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்று மரவள்ளி மற்றும் இதர வேளாண் பயிர்களை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 

தமிழகத்தில் ஒரு லட்சம் ஹெக்டரில் மரவள்ளி பயிரானது ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படும். நிகழாண்டில் இதுவரை 70 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வெட்டுக்கிளியானது ஏற்கெனவே தெரிவித்தது போல் தமிழகப் பகுதிகளுக்கு வர வாய்ப்பில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதியிலேயே அதிகம் காணப்படுகிறது. தமிழகத்திற்குள் நுழைவதற்கான சாத்தியமில்லை என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன், உதவி இயக்குனர் யோகநாயகி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

சேந்தமங்கலம் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்ட அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.