ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி
சென்னை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, பல முக்கிய விஷயங்கள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் பழனிசாமி.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும், அனைத்து பொது விநியோகக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத முகக்கவசங்கள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதால், தமிழக அரசே விலையில்லா முகக்கவசங்களை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் வசதி கொண்ட மாநிலம் தமிழகம்தான் என்றும் முதல்வர் தெரிவித்தார்.