சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மைலம்பட்டியில் பொதுப்பணித்துறை, நீர் நில வளத்திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சரபங்கா நதி குறுக்கே தடுப்பணை செப்பனிடப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருவதையடுத்து, டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கிழக்கு, மேற்கு கரை வாய்க்கால்களுக்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் சார்பில் நீர்நலவளத்திட்டத்தின் கீழ் சரபங்கா நதியின் குறுக்கே மைலம்பட்டி பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பணைகளை செப்பனிடுவதன் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வீணாகாமல் பயன்பாட்டிற்கு செல்ல உள்ளன.
மேலும், பொதுப்பணித்துறையின் சார்பில் மேட்டூர் அணைக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு கரை வாய்க்கால்கள், சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டடுள்ள தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகள் தூர்வாருதல், செப்பனிடுதல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் நிறைவுற்றவுடன் வழக்கம்போல் ஆடி மாதம் மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்குக்கரை வாய்க்கால்களில் அரசு தண்ணீர் திறந்து விட்டால் நிகழாண்டிற்கும் கடந்த ஆண்டைப் போல் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.