நாட்டை காவல்துறை கையில் கொடுத்துவிட்டு என்ன செய்துகொண்டு இருக்கிறார் முதல்வர்? என ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
ஒரே வாரத்தில் நான்காவது மரணம்!
நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வீரகேரளம்புதூரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன்(25). ஆட்டோ ஓட்டுநா். சில நாள்களுக்கு முன்பு காவல்துறையினர் தாக்கியதில் அவா் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
மகனை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை நவநீதகிருஷ்ணன் ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், தமிழக முதல்வருக்கு புகாா் மனு அனுப்பியிருந்தாா். இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் உயிரிழந்தாா்.
குமரேசன் இறந்த தகவல் வீரகேரளம்புதூரில் உள்ள அவரது உறவினா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களிடம் காவல்துறையினர் பேச்சுவாா்த்தை நடத்தினா்.