திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தினசரி 45 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் தெருக்களில் வீடுகள் இல்லாமல் திரிந்து வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தேவஸ்தானம் முன் வந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினசரி ஏழுமலையான் தரிசனத்திற்காக வரும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம் வழங்கி வருகிறது.
மேலும, திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் தேவஸ்தானம் அன்னதான பொட்டலங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பக்தர்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அன்னதானம் வழங்குவது நின்று போய் உள்ளது. அதனால் தேவஸ்தானம் தினசரி மதியம் 30 ஆயிரம் பொட்டலங்கள், இரவு வேளையில் 15 ஆயிரம் பொட்டலங்கள் என 45 ஆயிரம் பொட்டலங்கள் வழங்க முன்வந்துள்ளது.
புளியோதரை, தயிர்சாதம், தக்காளிசாதம், சாம்பார்சாதம், பொங்கல் என தினம் ஒரு மெனு தயாரித்து நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்க உள்ளது. இதில் முதற்கட்டமாக சனிக்கிழமை 15 ஆயிரம் புளியோதரை பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.