

கரோனா வைரஸுக்கு எதிராக புதுக்கோட்டை நகரில் தினம் தினம் சில காட்சிகளைக் காண முடிகிறது.
நகராட்சி சார்பில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் லாரியில் பிளீச்சிங் பவுடரைக் கலந்து கடந்த ஒரு வாரமாக அனைத்து வீதிகளையும் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்.
தொடர்ந்து புதை சாக்கடை அடைப்பை நீக்கும் சிறியரக ஜெட்ராடர் இயந்திரத்தைக் கொண்டு லைசால் கலந்த தண்ணீரை பெரிய கட்டடங்கள், வீதிகளில் நிற்கும் கார்கள், வாகனங்கள் என அனைத்திலும் பீய்ச்சி அடித்து வருகிறார்கள்.
இது ஒருபக்கம் என்றால் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதற்காக எளிய சில முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள்.
இயற்கை விவசாயி சா. மூர்த்தி, கடந்த இரு நாட்களாக தனது வீட்டிலுள்ள நாட்டு மாட்டின் கோமியத்தைப் பிடித்து வைத்து பெரிய பாத்திரங்களில் தண்ணீர் கலந்து வீடு வீடாகச் சென்று கொடுக்கிறார்.
வீட்டு வாசல்களில் தெளிக்கிறார். பொதுமக்களும் பாத்திரங்களை எடுத்து வந்து ஆர்வத்தோடு வாங்கி வீடு முழுவதும் தெளிக்கிறார்கள்.
மாட்டுக் கோமியம் கிருமி நாசினி என்பது அவர்களின் நம்பிக்கை. நகரின் முக்கிய வீதிகளில் மூர்த்தி வழங்கும் மாட்டுக் கோமியம் தெளிக்கப்படாத வீடுகள் இருக்க முடியாது.
இன்னொரு பக்கம், குட்டியானை (சிறிய சரக்கு வாகனம்) வாகனத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து கொண்டு, பெரிய பேரல்களில் மஞ்சள் நீரைக் கரைத்து வீதியெங்கும் தெளிக்கிறார்கள். சாணத்தில் வாசல் தெளிப்பதைப் போல பல வீதிகள் மஞ்சளாகவே காட்சி தருகின்றன.
நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளில் மஞ்சள் நீரை சிறிய டப்பாக்களில் கரைத்து வைத்துவிடுகிறார்கள்.
கரோனா வைரஸ் எந்த வழியே பரவும், எப்படிப் பரவும் என்ற தத்துவ அறிவெல்லாம் தேவையில்லை. எல்லோரும் தங்களுக்குத் தெரிந்த எளிமையான நடைமுறைகளைக் கைக்கொள்கிறார்கள், கரோனாவை விரட்டியடிக்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.