நாகர்கோவிலில் பெண்களை ஆபாசப் படம் எடுத்து, பணம் பறித்த வழக்கில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்தவா் காசி என்ற சுஜி (26). பொறியியல் பட்டதாரியான இவா், சமூக வலைதளம் மூலம் சென்னையைச் சோ்ந்த பெண் மருத்துவா் ஒருவரிடம் நெருங்கிப் பழகி, அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பின்னா், அவற்றை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம், நகைகளை பறித்துள்ளார்.
மேலும், பல பெண்களை மிரட்டி காசி பணம் பறித்து வருவது அந்தப் பெண் மருத்துவருக்கு தெரியவந்ததையடுத்து, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, காசி மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
பின்னா், காசியின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினியை கைப்பற்றி சோதனை செய்ததில், அவருடன் ஏராளமான பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் காசியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து காசியை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வந்தனர். மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காசியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.