ராமநாதசுவாமி கோவில் தங்கம், வெள்ளி நகைகளில் முறைகேடு நடக்கவில்லை: இணை ஆணையர் விளக்கம்
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், ஆபரணங்களில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று இணை ஆணையர் கல்யாணி விளக்கம் அளித்துள்ளார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில். இங்குள்ள ஆபரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான ஆபரணங்களில் அதன் எடை குறைந்துள்ளதாக ஆய்வு குழு அதிகாரிகள் கோவில் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினா். சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்களின் எடை குறைந்துள்ளது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்களின் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி ஆபரங்கள் சரியாக உள்ளன. தேய்மான காரணமாக எடை குறைந்துள்ளது. மேலும் சிறுசிறு பழுது காரணமாக தங்க ஆபரணங்களில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 244 இழப்பும், வெள்ளி இனங்களில் ரூ.12 லட்சத்து 29 ஆயிரத்து 10 இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து கோவில் பணியார்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் முறைகேடு நடந்ததாக குறிப்பிடப்படவில்லை என்றும் இதுவொரு வழக்கமான அலுவலக நடைமுறைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களோ, பக்தர்களோ திருக்கோவில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.