தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நிகழாண்டு, ஜுன்,ஜுலை மாதங்களில் பெய்த மழை காரணமாக மேலப்பாவூர் குளம் மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தது. கீழப்பாவூர், நாகல்குளம் உள்ளிட்ட குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாவூர் அணைக்கட்டு பகுதிக்கு குற்றாலம் அருவித்தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
அங்கிருந்து கால்வாய் மூலம் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. இன்னும் சில நாள்கள் இதே போல் தண்ணீர் வரத்து இருந்தால் குளம் நிரம்பி விடும் என்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளத்திற்கு தண்ணீர் வரத்து இருப்பதால் கீழப்பாவூர் பகுதி வயல்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.