மதுரையில் யாசகம் பெற்றுவரும் ஒருவர், கரோனா நிவாரண நிதிக்காக 8 ஆவது முறையாக ரூ. 10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இத்துடன் 80 ஆயிரம் ரூபாய் கொடை!
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைக் கடந்த மே மாதம் கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இதையடுத்து ரூ.10 ஆயிரம் வீதம் 7 முறை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து 8 ஆவது முறையாக ரூ. 10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் திங்கள்கிழமை வழங்கினார். முறை பத்தாயிரம் வீதம் மொத்தமாக இதுவரை 80 ஆயிரம் ரூபாய் யாசகம் பெற்ற பணத்தினை கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பூல்பாண்டியன் கூறும்போது,
யாசகம் பெறும் பணத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்குவதால் பொதுமக்கள் மரியாதை தருகின்றனர். நாம் இருக்கும் வரை மற்றவர்களுக்கு இரக்கம் காட்டி உதவி செய்ய வேண்டும் என்றார்.