சென்னை தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல், கரோனா தொற்றுக்கும் தலைநகராக மாறி வரும் நிலையில், ராயபுரம் கரோனா தொற்று பாதிப்பில் மட்டும் அல்லாமல் இறப்பிலும் முதலிடத்தில் உள்ளது.
ராயபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 4584 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,944 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பில் அடுத்த இடத்தில் 49 பலியுடன் திருவிக நகர் உள்ளது. தேனாம்பேட்டை 42 பலியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாள்தோறும் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,395 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 275 பேர் பலியாகியுள்ளனர்.
6 மண்டலங்களில் உச்சம்: ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 4,584 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 3,584 பேருக்கும், தேனாம்பேட்டையில் 3,291 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,966 பேருக்கும், திருவிக நகரில் 2,550 பேருக்கும், அண்ணா நகரில் 2,571 பேருக்கும், அடையாறில் 1,534 பேருக்கும் வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 6 மண்டலங்களில் மட்டும் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில்லாமல் வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர் மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது. அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா பாதிப்பு 900 என்ற அளவில் உள்ளது.