கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.
சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இதில், 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியிருக்கும் ரஜினி, இன்றைய கூட்டத்தில் புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர், 'கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகள் எவ்வாறு நடந்து வருகின்றன என்பது குறித்து ரஜினி கேட்டறிந்தார்.
கட்சி தொடக்கம், இன்றைய கூட்டத்தின் முடிவுகள் குறித்து ரஜினி தான் தெரிவிக்க வேண்டும். அவரது அறிவுறுத்தலின்பேரில், நாங்கள் இன்றைய ஆலோசனைக் கூட்டம் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியாது' என்று கூறினார்.