ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனா பரவலைப் பொருத்து கட்டுப்பாடுகள் தீவிரம்: தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் கரோனா பரவலைப்  பொருத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

News image
கரோனா பரவலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமைச் செயலாளர்
Updated On :3 ஏப்ரல் 2021, 12:44 pm

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைப்  பொருத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பரவலைத் தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ர மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டும் 02.04.2021 அன்று மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்று தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் பேசுகையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய்த் தொற்று நம் நாட்டின் முக்கிய பிரச்சினை என்றும் சிறியநகரம் மற்றும் கிராமங்களில் இத்தொற்று உறுதியாவது கவலையளிப்பதாகவும் கூறினார். மேலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் நம் அனைவருக்கும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது நன்றாக தெரியும் என்றும், தடுப்பூசி கிடைக்கப்பெறுவது ஒரு சாதகமான சூழல் என்றாலும், நிலையான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காமல் மெத்தனப் போக்கு கொண்டிருப்பது தொற்று அதிகரிக்க வழிவகை செய்யும் எனவும் மேலும் ஊரடங்கு இல்லாத நிலையில் இத்தொற்றை தடுப்பது சவாலானது எனவும் கூறினார். தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.

இச்சூழலில் இத்தொற்றினை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.

1. பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த ஆணையிட்டதன் விளைவாக நாள் ஒன்றுக்கு 50,000 என்ற அளவிலிருந்து தற்பொழுது நாளொன்றுக்கு 85,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்தப்படுகிறது.

2. கோவிட் பரிசோதனை முறைகளில் குறைந்தபட்சம் 70 சதவீதம் ஆர்டி-பிசிஆர் முறையில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டினை பொறுத்தவரை 100 சதவீதமும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

3. நோய்தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25  முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நோய்த்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4. மேலும் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய்கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழகத்தில் 02.04.2021 அன்று 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாகவே படுக்கைவசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்புகவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‘108’ அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.

6. கோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இயத நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்தவேண்டும். இதை சட்டப்படி கண்காணித்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டினை பொறுத்தவரை இயதநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டு பிரச்சுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதார, உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது. 16.03.2021 லிருந்து 02.04.2021 வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.2,58,98,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத்தளங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழக்களில் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

7. கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். மக்களிடையே, இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 02.04.2021 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என 31,75,349 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. மேலும் 03.04.2021 அன்று வரை 54,78,720 தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

8. கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப் பெற்று மத்திய அரசின் எய்ம்ஸ் போன்ற மருத்துவ மனைகளில் உள்ள வல்லுநர்களின் ஆலோசனைக்கு ஏற்ப நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.

9. மேலும் பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது. பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்களை பெறவோ தங்கள் குறைகளை தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‘104’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

10. மேலும் நோய்த்தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினை பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும், முறையாக கைகளை கழுவியும் மற்றும் அரசின் இன்ன பிற அறிவுறுத்தல்களை கடைபிடித்தும் கரோனா பெரும் தொற்றினை தடுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.