சென்னை: தமிழ்த் திரையுலகின் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இறப்பு திரையுலகத்தினருக்கு மட்டுமல்ல; தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் வெள்ளிக்கிழமை காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சின்ன கலைவாணர் விவேக் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அவரது இறப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.