/

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஓணம் வாழ்த்து

அன்பு அமைதி சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஓணம் பண்டிகையையொட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

அன்பு அமைதி சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஓணம் பண்டிகையையொட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திருவோணம் திருநாள் வசந்தகால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமால் வாமன அவதாரம் பூண்டு மகாபலி சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணம் மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கும் அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தை ஏற்று அருள்புரிந்தார். அதன்படி ஆண்டுதோறும் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வரும் நாளே ஓணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

திருவோணம் பண்டிகையின் போது மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் 10 நாள்களுக்கு அரிசி மாவினால் அழகிய கோலமிட்டும், கோலத்தை வண்ணப் பூக்களால் அலங்கரித்தும், குத்து விளக்கு ஏற்றியும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவார்கள், இப்பண்டிகையின் போது ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகை தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள்.

அன்பு அமைதி சகோதரத்துவம் வளர்க்கப்படவேண்டும். அகந்தையும். ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கின்ற உயரிய கருத்தை அனைவரும் அறியும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த திருவோணத் திருநாளில், அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எங்களது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம் ” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.