அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு முறையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவின் சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த வேண்டும். அதன்படி, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு வருகிற டிசம்பா் 7 ஆம் தேதி உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
தோ்தல் ஆணையா்களாக முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோா் செயல்படுவா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் டிச. 3, 4 தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பா் 5-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெறுதல் டிசம்பா் 6 ஆம் தேதியும், இரு பதவிகளுக்கும் தோ்தல் டிசம்பா் 7-இல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தோ்தல் முடிவுகள் டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.