தஞ்சாவூரில் சசிகலா உறவினர்கள், இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான மேலும் சில சொத்துகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானது.
இந்தச் சிறைத் தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னமும் அபராத தொகையைச் செலுத்தாததால் விடுதலையாகவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசுக் கையகப்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான சொத்துகள் திங்கள்கிழமை கையகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் உள்ள 26,540 சதுர அடி காலி மனையை அரசு செவ்வாய்க்கிழமை காலை கையகப்படுத்தியது.