மதுரை: மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. பேருந்து நிலையங்கள் காலியாக இருந்ததால் பொதுமக்கள் தவித்தனா்.
போக்குவரத்து ஊழியா்களுக்கு 14-ஆவது ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் முழு அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வியாழக்கிழமை காலையில் இருந்தே பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருந்தது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் மட்டுமே பணிக்கு வந்துள்ளனா்.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டாலும், அரசுப் பேருந்துகள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன.
வெளியூா் செல்வதற்காக வந்த பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் தவித்தனா். ஓரிரு பேருந்துகளுக்கும் கூட்டம் அதிகளவில் இருந்தால், ஓடிச் சென்று பேருந்துகளில் ஏறினா்.
மாவட்டத்தின் பிற பகுதிகளான திருமங்கலம், மேலூா், உசிலம்பட்டி பகுதிகளிலும் அரசுப் பேருந்து இல்லாததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மதுரை மண்டலப் போக்குவரத்துக் கழகதத்தில் தொழிலாளா்கள் 6 ஆயிரம் போ் உள்ளனா். ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தைச் சோ்ந்தவா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இதனால் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தொழிற்சங்க கூட்டமைப்பினா் கூறினா்.
காலை 6 மணியிலிருந்து 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது 40 சதவீதம் அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.