விராலிமலை அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் பிடாரி அம்மன் கோவிலில் கடந்த 14 ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி கோவில் மாடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.
இதில், மாடுகளை அடக்க முயன்ற இலுப்பூர் அருகே உள்ள சாங்கிராப்பட்டி கருப்பையா மகன் பொன்னுசாமியை (42) மாடு முட்டியதில் தலையில் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு பொன்னுசாமி உயிரிழந்தார்.
இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.